குறைந்த விலை லேப்டாப்கள் பயனளிக்குமா?
லேப்டாப்கள் மற்றும் கணினிகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதை, தற்போதைய நாளிதழ், தொலைக்காட்சி விளம்பரங்கள் திரும்பத் திரும்ப அறிவித்தாலும், அவற்றை வாங்குபவர்கள் பயன்பெறுவார்களா என்பது அலசப்பட வேண்டிய விஷயம்.அனைத்து குறைந்த விலை லேப்டாப்களும் லினக்ஸ் (Linux) அல்லது டிஓஎஸ் (Dos) போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வருகின்றன.ஏனெனில் சட்டபூர்வமான மைக்ரோசாஃப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் (Authorised Microsoft Operating System) மற்றும் அதன் வேர்ட் (Word), எக்செல் (Excel) ஆகியவற்றுடன் ஒரு கணினி அல்லது லேப்டாப் தயாரிக்க வேண்டுமென்றால், அதன் விலை தற்போதைய குறைந்த விலை கணினிகளின் விலையை காட்டிலும் 20 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும்.தற்போது கணினிகளில் பதிவு செய்து தரப்படும் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் இலவசம் தான் என்றாலும், அதனை பரமாரிக்க ரெட் ஹேட் (Red Heat) அல்லது நாவெல் (Novell) ஆகியவை மூலம் நிர்மாணம் செய்தால் மட்டுமே பலனளிக்கும். ஆனால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.இது தவிர இந்தியாவில் கணினி பயன்படுத்தும் 22 மில்லியன் மக்களில், 95 சதவீதத்தினர் மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்துகின்றனர். இதில் 70% மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் 90% மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் ஆகியவை கள்ளத்தனமாக நகல் செய்யப்பட்டவைகளே என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.தற்போது இந்த சட்டவிரோத நகல் விவகாரத்தை (Software piracy) மைக்ரோசாப்ட் ஒடுக்கினால், சட்டபூர்வமான ஆபரேட்டிங் சிஸ்டத்தை வாங்குவது கட்டாயமாகிவிடும். இதனால் குறைந்த விலையில் லேப்-டாப்களையோ, கணினிகளையோ அளிக்க முடியாது.வன்பொருள் (Hardware) நிபுணர்கள் கணினி விலையை குறைக்க நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி வரும் வேளையில், மென்பொருள் (Software) நிறுவனங்கள் தங்கள் விலையை குறைப்பதில்லை. இதனால் ஒரு கணினி விற்பனை விலையில் இடைவெளி விழுந்துள்ளது.கணினி தொழில்நுட்பத்தின் இந்த இரண்டு பிரிவும் ஒருங்கிணைந்து திட்டங்களை தீட்டினால் மட்டுமே குறைந்த விலை லேப்டாப்களை சகல வசதிகளுடன் அளிக்க முடியும்.ஹெச்.சி.எல் (HCL) சமீபத்தில் அறிமுகப்படுத்திய மலிவு விலை மைலீப் லேப்டாப்கள் லினக்ஸ், ஃபிளாஷ் டிரைவ் மற்றும் 7 அங்குல வண்ணத்திரை ஆகியவற்றை உள்ளடக்கியது. பெரிய திரை மற்றும் சில கூடுதல் வசதிகளுடன் கூடிய லேப்டாப்கள் வேண்டுமானால் விலை அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.விண்டோஸ் விஸ்டாவுடன் ஆபரேட்டிங் சிஸ்டத்தை கொண்ட கூடுதல் பயன்பாடுகளை அளிக்கவல்ல ஹெச்.சி.எல் நிறுவனத்தின், ஒய் சீரீஸ் (Y-Series) லேப்டாப்கள், ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் விலையில் கிடைக்கிறது.லினக்ஸ் மற்றும் டி.ஓ.எஸ் உள்ள லேப்டாப்களிலேயே சில மேம்பாடுகளை செய்து கொள்கிறோம் என்றால் பயனாளர்களின் பயன்பாடுகளை பொறுத்து மேலும் ரூ.7000 செலவு செய்ய வேண்டி வரும்.இந்தியா சீனா போன்ற நாடுகளில் மென்பொருளின் விற்பனை விலை குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி டூக் ஹாகர் கூறியுள்ளார்.சட்டபூர்வமான மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் நிர்மாணிக்கப்பட்ட (Install) ஒரு கணினி அல்லது லேப்டாப் விலை, மற்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தை கொண்ட கணினிகளுடன் ஒப்பிடுகையில் 25 முதல் 35 சதவீதம் வரை விலை அதிகமாக காணப்படுகிறது என்பதையும் டூக் ஹாகர் ஒப்புக் கொள்கிறார்.இதனால் குறைந்த விலை லேப்டாப்களை சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக மட்டுமே வாங்குவது சிறந்தது. அதிக பயன்பாடுகள் தேவைப்படுபவர்கள் மலிவு விலை லேப்டாப்களை வாங்கினால் எப்படியும் பிற பயன்பாடுகளை சேர்ப்பதற்கு கூடுதல் செலவு பிடிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.