உலகில் கண் பார்வை அற்றோர் அதிகம் வாழும் நாடு இந்தியா
உலகில் கண் பார்வை அற்றோரை அதிகம் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது; உலக அளவில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 3கோடியே 70 இலட்சம் என்றிருக்க இதில் 1 கோடியே 20 லட்சம் பேர் இந்தியாவிலேயே இருக்கிறார்கள் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார் இந்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பனபாக லக்ஷ்மி.
இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் பார்வையற்றோர் எண்ணிக்கை 15.6 லட்சம் என்றும் தில்லியில் 15.5 லட்சம் என்றும் ஆந்திரத்தில் 10 லட்சம் என்றும் தமிழகத்தில் 4 லட்சம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் பார்வையற்றோர் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து அகர்வால் கண் மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் அமர் அகர்வால் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.
போஷாக்கின்மை, உடல் நலம் குறித்த அறிவீனம், அக்கறையின்மை ஆகிய காரணங்கள் இந்தியாவில் பார்வையற்றோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதன் காரணங்கள் என்றும் கண் மருத்துவர் அமர் அகர்வால் தெரிவித்தார்.
பார்வை இழந்திருப்பவர்களில் பலருக்கு முறையான சிகிச்சை மூலம் பார்வையை மீட்டுத்தர முடியும்; ஆனால் அப்படியான சிகிச்சைகள் இருப்பது குறித்து எல்லோருக்கும் தெரிவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தவிர இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகம் இருக்கிறது. நீரிழிவு நோய் முற்றி கண் பார்வை பாதிக்கப்படும் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.