குறைந்தவிலை லேப்டாப் ஹெச்.சி.எல் அறிமுகம்
தகவல் தொழில் நுட்ப முன்னணி நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.13,990 விலையில் மடிக்கணினியை (லேப் டாப்) அறிமுகம் செய்துள்ளது.அலைடு கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் 2 நாட்களுக்கு முன் ரூ.14,999-க்கு லேப்டாப்பை அறிமுகம் செய்த நிலையில், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் இந்த குறைந்தவிலை லேப்டாப் அறிமுகம் குறிப்பிடத்தக்கது.எக்ஸ் மற்றும் ஒய் சீரீஸ் என்று இரு வகை லேப்டாப்களை ஹெச்.சி.எல் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒய் சீரிஸ் ரகங்கள் விலை 29,999 முதல் 39,999 ரூபாய் வரை கிடைக்கின்றன. 13,990 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ் சீரீஸ் ரக லேப்டாப்களில் ஃபிளாஸ்க் மற்றும் டிஸ்க் அடிப்படையிலான சேமிப்பு முறைகள் உள்ளன. இதில் லினக்ஸ் என்ற ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளது.ஒய் சீர்ஸ் லேப்டாப்களில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், விஸ்டா ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளது. 2 மாடல்களிலும் நெட்வொர்க் போர்ட்டுகள் உள்ளன.ஒரு கிலோவிற்கும் எடை குறைவாக உள்ள இந்த மலிவு விலை லேப்டாப் 7 அங்குல திரை கொண்டது. மேலும் இன்டெல் ப்ராசஸர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பாண்டிச்சேரி மற்றும் உத்தராகண்ட் தொழிற்சாலைகளில் இந்த வகை லேப்டாப்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு அதிகாரி ஜார்ஜ் பால் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர், முதல் டெஸ்க் டாப் கணினி, மற்றும் முதல் வீட்டு உபயோக கணினி ஆகியவற்றை அறிமுகம் செய்த வரலாறு கொண்ட ஹெச்.சி.எல் தற்போது இந்த மலிவு விலை மைலீப் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் லேப்டாப் சந்தை கடுமையாக வளர்ந்து வருவதையடுத்து இந்தியாவிலேயே இதனை உற்பத்தி செய்ய பன்னாட்டு நிறுவனக்கள் கடும் போட்டியில் இறங்கும் என்பது உறுதி.